யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சிலருக்கு சமூக வலைத்தளங்களின் ஊடாக மேற்கொள்ளப்பட்டது எனக் கூறப்படும் பகிடிவதை தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மாணவர்கள் சிலர் புதுமுக மாணவர்களிடம் 'வட்ஸப்' ஊடாக நிர்வாணப் புகைப்படங்களை அனுப்புமாறு கட்டாயப்படுத்தி பகிடிவதை செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில செய்திப் பத்திரிகையொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிரேஷ்ட மாணவர்கள் சிலர் 'வட்ஸப்' மற்றும் பிற சமூக ஊடகங்களின் வழியாக நிர்வாணப் புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்டவற்றை அனுப்புமாறு கட்டாயப்படுத்தி வருகின்றனர் எனவும், அவர்களின் கட்டளைகளுக்கு இணங்க மறுக்கும் மாணவர்களுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன எனவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இன்று அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின்போது, இந்த விடயம் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சரவைப் பேச்சாளரிடம் கேள்வி எழுப்பினார்.
இந்த விடயம் தொடர்பாக தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று அமைச்சரவைப் பேச்சாளர் பதிலளித்தார்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்